சென்னை: தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பரவலாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்த அளவில் கடந்த 2 நாட்களாக மாலையில் பலத்த மழை பெய்தது. இன்று காலை லேசாக மழை பெய்தது.
பொதுவாக மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழை தூறல் போடுகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 14 செ.மீ. மழையும், திண்டிவனத்தில் 10 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டின் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்யும். உள் மாவட்டங்களிலும், தஞ்சைக்கு திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்த அளவில் அடுத்து வரும் இரண்டு நாட்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.