நதிநீர் இணைப்புக்கான நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தண்ணீர் பஞ்சம், வறட்சியால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமை, கடன் சுமை காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டதால், விவசாயம் அடியோடு அழிந்துவிட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர தொடர்ந்து மறுத்து வருகின்றன. அதோடு, புதிதாக அணைகளைக் கட்டியும், ஏற்கெனவே உள்ள அணைகளின் உயரத்தைக் கூட்டியும் சிறிதளவும் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைத்து விடாத வகையில் அண்டை மாநிலங்கள் முயற்சித்து வருகின்றன.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தேசிய அளவில் நதிகளை இணைப்பதுதான். மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதிக்காமல் நதி நீர் இணைப்பிற்கான நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மத்திய அரசு ஒரு குழு அமைத்து, அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்பான முறையில் திட்டத்தை வகுத்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.