புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, 124 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 124 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, திட்டத்தை ரத்து செய்யவும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயத்தோடு, அப்பகுதியில் வாழும் குருவிகள், விலங்கினங்கள் அனைத்தும் அழிந்து போகும் என்பதை அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக, போராட்டக் களத்தில் கூண்டில் அடைக்கப்பட்ட குருவி, முயல்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.