காகித வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் பயனற்ற நிலங்களைப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகளை அணுகலாம் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் யோசனை தெரிவித்தார்.
காகித வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 56 }ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் மாநாடு, சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது:
நகர்ப்புறங்களுக்கு அப்பால் பயனற்ற நிலங்களை கையகப்படுத்தி, காகித தொழில் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களை தயார் செய்யலாம். இதுதொடர்பான சலுகைகள், அனுமதியைப் பெற மத்திய, மாநில அரசுகளை அணுக வேண்டும்.
ஆசிய நாடுகளில் இருந்து காகிதப் பொருள்கள் குறைந்த வரியில் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு காகிதத் தொழில் பாதிக்கப்படுவதாகவும், பெரிய சவால்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதற்கு மாற்றாக, மரச் சிப்ஸ்களை குறைந்த விலையில் அதிக அளவுக்கு இறக்குமதி செய்யலாம். இதன் மூலம், பிரச்னையை சரி செய்ய முடியும்.
காகித தொழிலில் மறுசுழற்சி மூலப்பொருள்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேலான பொருள்கள் மறுசுழற்சிக்கு வராமல் போய் விடுகின்றன. இதனால் பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே, திடக்கழிவை பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நீடித்த வளர்ச்சியாக இருக்காது: காகித தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக உள்ள மரங்களை வளர்த்து வெட்டுவது என்பது நீடித்த வளர்ச்சியாக இருக்காது. பறவைகள் கூடு கட்டி வாழும் மரங்கள், பழங்களைக் கொடுக்கும் மரங்கள் ஆகியவைதான் நீடித்ததாக இருக்கும். எனவே, மரத்தை மட்டும் பார்க்காமல் மாற்று வழிமுறைகளை கையாண்டு உற்பத்தியை பெருக்கவும், விவசாயம் செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், காகித வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சாம்ஜி காரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.