பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவைச் சந்திக்க வாய்ப்பு அளிக்கப்படாததால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தில்லியிலிருந்து திரும்பினார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாடு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித் தனியே வியாழக்கிழமை (ஆக.10) இரவு சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இணையான முக்கியத்துவத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அளித்து வந்த பாஜக தலைமை, இந்த முறை பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்க வாய்ப்பு தரவில்லை. இதனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தில்லியிலிருந்து சனிக்கிழமை புறப்பட்டார்.
ஓபிஎஸ் அணியினர் விளக்கம்: பயணத் திட்டத்தில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தில்லியிலிருந்து புறப்பட்டு மும்பை வழியாக ஷீரடி சாயிபாபா ஆலயத்துக்கு சென்றதாக ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர்.