வாழப்பாடி பகுதியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கூடுதல் பயணிகளை ஏற்றிச் சென்றது, வரி செலுத்தாமல் இயக்கியதாக மூன்று சொகுசுப் பேருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும் 58 சொகுசுப் பேருந்துகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அந்தந்தப் பகுதியில் சிறப்பு தணிக்கைக் குழு அமைத்து சொகுசுப் பேருந்துகளில் ஆய்வு நடத்தினர். வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை, சேலம் சரக துணைப் போக்குவரத்து ஆணையர் பொன்.செந்தில்நாதன் தலைமையில், ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆத்துôர் சரவணன், வாழப்பாடி கோகிலா ஆகியோர் கொண்ட குழுவினர், வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில், வாகனச் சோதனை மற்றும் தணிக்கை மேற்கொண்டனர்.
இதில் 450 சொகுசுப் பேருந்துகளை சோதனை செய்த அக் குழுவினர், முறையாகப் பராமரிக்காத 58 பேருந்துகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் வசூலித்தனர். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக ஒரு பேருந்தையும், வரி செலுத்தாமல் இயக்கியதாக வெளி மாநிலப் பேருந்துகள் இரண்டையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், தலைக் கவசம் அணியாமலும், செல்லிடப்பேசியில் பேசியபடியும், மது அருந்திய நிலையிலும் வாகன ஓட்டியவர்கள், வாகனங்களில் அதிக பயணிகள் மற்றும் சுமையை ஏற்றிச் சென்றதாக 73 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்தனர்.