எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் விசைப்படகுகளில் இன்று திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர். வழக்கம்போல இந்தியக் கடல் எல்லைக்குள் பருத்தித்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு இலங்கை கடற்படையினர் திடீரென வந்தனர்.
அங்கு விசை படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யத்தைச் சேர்ந்த கபிலன், ராமசாமி, கோவிந்தசாமி மற்றும் தேவராயன் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்து, அவர்களது படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் போது, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் சம்பவமாக நிகழ்ந்து வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.