அவசர சட்ட முன்வரைவு: மத்திய அரசிடம் இன்று சமர்ப்பிப்பு

நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகைசெய்யும் அவசர சட்ட முன்வரைவை மத்திய அரசிடம் திங்கள்கிழமை (ஆக.14) வழங்குவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தில்லி
அவசர சட்ட முன்வரைவு: மத்திய அரசிடம் இன்று சமர்ப்பிப்பு

நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகைசெய்யும் அவசர சட்ட முன்வரைவை மத்திய அரசிடம் திங்கள்கிழமை (ஆக.14) வழங்குவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றனர்.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதையடுத்து அதற்கான அவசர சட்ட முன்வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நீட் தேர்வில் இருந்து, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதையடுத்து முதல்வர் பழனிசாமியுடன் அவரது இல்லத்தில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவு திங்கள்கிழமை (ஆக.14) காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும். சட்டத்திற்கு நிச்சயம் ஒப்புதல் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்தச் சட்டச் சிக்கலும் ஏற்படாத வகையில் மத்திய அரசு ஆலோசித்து இந்த, நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு குழப்பம் ஏற்படாத வகையில் நீட் விவகாரத்தில் தமிழக அரசு திடமான முடிவு எடுக்கும். எந்தச் சூழ்நிலையிலும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக எதிர்மறையான கருத்துகளை மத்திய அரசு கூறவில்லை. கடந்த ஆண்டு நடந்தது போல், இந்த ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கும் என நம்புகிறேன்.
சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க கூடுதல் இயக்குநர் செந்தில்ராஜ் ஆகிய 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை தில்லி சென்றனர். ஓராண்டு விலக்குப் பெற மிக விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com