தமிழகத்தில் டெங்குவை ஒழிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், சுமார் 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படடுள்ளனர். இவர்களில் சிலர் இறந்துள்ளனர். டெங்குவைத் தடுக்க சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெங்குவை ஒழிக்க மத்திய அரசு, மாநில அரசுக்குப் போதிய நிதி வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இருதய, சிறுநீரக அறுவை சிகிச்சைகளுக்கு அதிகமான தொகை வசூலிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் இந்த அறுவை சிகிச்சைகளைப் பெற முடிவதில்லை. எனவே அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றார்.
அமைப்புத் தேர்தல் குறித்த கூட்டம்: காங்கிரஸ் கமிட்டியின், அமைப்புத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, திருநாவுக்கரசர் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைப்புத் தேர்தல், மட்டுமின்றி தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.