தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வடக்கு தமிழகம், மற்றும் தெற்கு ஆந்திரத்தை ஒட்டிய கடல் பகுதியின், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அதிகபட்சமாக 140 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருப்பத்தூர், திருவையாறில் தலா 100 மி.மீ., மதுரை, திருப்புவனத்தில் தலா 90 மி.மீ , அரிமலம், கள்ளக்குறிச்சி, செஞ்சி , செங்கம், மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 80 மி.மீ. மழை பதிவானது. அடுத்த இரு தினங்களுக்கு, தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரத்தில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றார் .
21% அதிகரிப்பு: தென்மேற்குப் பருவ மழையைப் பொருத்த வரை, கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் 177 மி.மீ., பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் பதிவாகும் இயல்பான மழை அளவு 146 மி.மீ. இந்த ஆண்டு இயல்பை 21 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.