"நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே புளியரம்பாக்கத்தில் வெங்கடேசன் என்பவர் சாதிவெறியால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புளியரம்பாக்கம் வெங்கடேசன் படுகொலை தொடர்பாக, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும். வெங்கடேசன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் மகளிர், குழந்தைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆணையங்கள் இருப்பது போல தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
ஜெயலலிதாவின் புகழ் இன்றளவும் மங்கவில்லை. திமுக, காங்கிரஸ் போல அதிமுகவில் உள்ளவர்கள் சில குழுக்களாக இருக்கின்றனர். இதனை அக்கட்சியின் பிளவு என பார்க்கக் கூடாது. இருப்பினும், அக்கட்சியினர் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள "நீட்' தேர்வை பாஜக மட்டுல்லாது காங்கிரஸ் கட்சியும் கொண்டுவர முனைந்ததுதான். இந்த தேசிய அளவிலான ஒரே தேர்வு என்ற "நீட்' தேர்வை வரவேற்கிறேன். ஆனால், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. மாணவ ர்கள் பாதிக்கப்படாத வகையில் அதனைச் செயல்படுத்தலாம். இதில், இந்திய மருத்துவக் கவுன்சில் மாற்றங்களை, நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது "நீட்' டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.