சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மானாமதுரை அருகே பதினெட்டான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி(65). இவரது மகன்கள் பிச்சை(45), சத்தியநாதன்(35). இவர்களில் சத்தியநாதன் மாற்றுத்திறனாளியாவார். பிச்சை மனைவி வனிதா(40) . பிச்சை சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
மற்ற மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வசித்து வரும் வீட்டைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு முழுவதும் இப் பகுதியில் மழை பெய்தது. அப்போது வீட்டின் அருகேயுள்ள மின்கம்பத்திலிருந்து தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி இந்த வேலியின் கம்பியில் உரசி அதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதிகாலை 5 மணிக்கு வாசல் தெளிப்பதற்காக வனிதா வேலியுடன் இணைந்த கதவைத் திறந்துள்ளார். அப்போது இவரை மின்சாரம் பாய்ந்ததில் அவர் அலறியவாறு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த மாமியார் பாப்பாத்தி, இளையமகன் சத்தியநாதன் ஆகியோர் வனிதாவை தொட்டுள்ளனர். அப்போது இவர்கள்மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிறிந்த கிராம மக்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் சடலத்தையும் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
வீட்டின் முன்பு தாழ்வாகச் சென்ற மின்கம்பியை இழுத்து கட்டி வைத்துள்ளனர். அதில் இருந்து மின்சாரம் பாய்ந்து 3 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.