பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழைத் தொடர்ந்து மாற்றுச் சான்றிதழிலும் தமிழில் பெயர் விவரம் குறிப்பிடும் புதிய நடைமுறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:
நிகழ் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் அவர்களின் தலைப்பெழுத்துடன் கூடிய பெயர் குறிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது.
தமிழ்ப் பெயரில் ஏற்படும் சில எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கு பள்ளிகளால் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களில் ('டிசி') இனிமேல் பெயர்களைத் தலைப்பெழுத்துடன் தமிழில் குறிப்பிட்டு வழங்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பள்ளியில் படித்து 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படித்து இடையில் நின்றவர்கள் மற்றும் பள்ளி மாணவராக 10-ஆம் வகுப்பு தேர்வெழுதுவோர் ஆகியோருக்கும் பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழில் தலைப்பெழுத்துடன் பெயர் குறிப்பிட்டு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.