கடலூரில் புதன்கிழமை நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மாவட்டங்கள் வாரியாக நடத்தி வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதன்கிழமை (ஆக.16) மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. விழாவுக்கு சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கிறார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார்.
விழாவில், எம்ஜிஆர் உருவப் படத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறார். மேலும், போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் விழா பேருரையாற்றுகிறார். மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். எம்பிக்கள் ஆ.அருண்மொழிதேவன், மா.சந்திரகாசி, எம்எல்ஏக்கள் நாக.முருகுமாறன், கே.ஏ.பாண்டியன், வி.டி.கலைச்செல்வன், சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.
விழாவில், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. முன்னதாக காலை 9 மணிக்கு விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.