சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்தது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மருத்துவப் பரிசோதனைக்காக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று காலை 5.30 மணியவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையிலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது.
சாதாரண பரிசோதனைக்காகவே கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறிய அளவிலான சிகிச்சைக்கு பின்னர் இன்று மாலைக்குள் அவர் வீடு திரும்புவார். கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள உணவுக்குழாய் மாற்றப்படுகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்று சிகிச்சை நல்லமுறையில் முந்ததாகவும், மருத்துவமனையில் இருந்து கருணாநிதி சிறிது நேரத்தில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.