ஊழல் மலிந்துவிட்டது என்ற கமல்ஹாசனின் கருத்து வரவேற்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
திருவாரூரில் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைக்க வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2 அணிகளாக இருந்த அக்கட்சி, தற்போது 3 அணிகளாக பிளவுபட்டுள்ளது. இந்த அணியினர் பதவிச் சண்டையில் தங்களது கவனத்தை செலுத்துகிறார்களே தவிர மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.
அதிமுகவில் தற்போதுள்ள 3 அணிகளுமே ஊழல் செய்தவைதான். அதைப் பயன்படுத்தி அதிமுகவின் கையை முறித்து தமிழகத்தில் பாஜக நுழைய நினைக்கிறது. இது தமிழக மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது.
தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது என்று நடிகர் கமல்ஹாசன் கூறுவது சரிதான். அவரின் அந்த கருத்தை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்குப் பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளை பாதுகாக்கும் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்.
நியாயவிலைக் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வந்த நிலையில் தற்போது மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் பல புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் உள்ள இந்த நிபந்தனைகளை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் ராமகிருஷ்ணன்.