கொடைக்கானல்: தனது நீண்ட நாள் காதலரான தேஸ்மந்த் கொட்டிக்னிகோவை கரம் பிடித்தார் இரோம் ஷர்மிளா. கொடைக்கானல் சார்-பதிவாளர் அலுவலகத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் இரோம் சர்மிளா (45). அந்த மாநிலத்தில் நடைபெறும் ராணுவ அடக்குமுறையை கண்டித்து, 16 ஆண்டு காலமாக காலவறையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அவர் கடந்தாண்டு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
இந்த நிலையில், இரோம் ஷர்மிளா தனது நீண்ட நாள் காதலரான இங்கிலாந்து குடியுரிமை பெற்ற தேஸ்மந்த் கொட்டிக்னிகோவை, சிறப்பு திருமணச் சட்டத்தின் படி இன்று காலை திருமணம் செய்து கொண்டார்.
துணை சார்-பதிவாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது. இரோம் ஷர்மிளா விரலில் திருமண மோதிரத்தை அணிவித்தார் தேஸ்மந்த் கொட்டிக்னிகோ.
மிக எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் மணமக்களின் குடும்பத்தார் யாரும் பங்கேற்கவில்லை.
கடந்த ஒரு மாதமாக கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் இரோம் சர்மிளா தனது நீண்டகால காதலரான லண்டனைச் சேர்ந்த தேஸ்மந்த் கொட்டிக்னிகோ (55) உடன் தங்கியிருந்தார். இருவரும் கடந்த ஒரு மாதமாக கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பல்வேறு இடங்களையும் சுற்றி பார்த்து, அங்குள்ள மலைவாழ் மக்களிடம் பழகி வந்தனர்.
இரோம் சர்மிளா தனது காதலரை திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த மாதம் கொடைக்கானல் சார்- பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அவர் இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்ய விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இது கலப்புத் திருமணம் என்பதால் சிறப்புத் திருமண சட்டப்படி திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.