குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது:
தெலங்கானாவில் இருந்து கடலோரத் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன்கூடிய மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றனர்.
மழை நிலவரம்: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 90 மி.மீ., ஒகேனக்கல், ஊத்தங்கரையில் 80 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 70 மி.மீ., பழநி, ஸ்ரீபெரும்புதூர், பென்னாகரம், உசிலம்பட்டியில் 50 மி.மீ., மழை பதிவானது. குடியாத்தம், திருச்சி, துறையூர், சூலகிரி, ஆம்பூர், மரக்காணம், தளி, கொடுமுடி, வத்திராயிருப்பு, உத்திரமேரூர், ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.