கிருஷ்ணகிரியில் 650 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை பற்றிய கல்வெட்டு கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், சென்னை பற்றிய 650 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளதாக 'சென்னை 2000+' அறக்கட்டளையின் தலைவர்
கிருஷ்ணகிரியில் 650 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை பற்றிய கல்வெட்டு கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், சென்னை பற்றிய 650 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளதாக 'சென்னை 2000+' அறக்கட்டளையின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்தார்.
சென்னை 2000+ அறக்கட்டளை, தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியகம் துறை சார்பில், சென்னை மாத நிகழ்ச்சிகளை முன்னிட்டு சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில், சென்னை எழும்பூர் தொல்லியல் துறை வளாகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், தொன்மையான சென்னையை பற்றி, 2000+அறக்கட்டளையின் தலைவர் ரங்கராஜன் பேசியதாவது:
சென்னை மிகவும் தொன்மையான பகுதி என்பதற்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கான ஓலைச்சுவடிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், வணிகம், மொழி சார்ந்த வரலாற்று ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இதில் தொண்டை மண்டல பகுதியாக விளங்கும் வடதமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி செய்துள்ளனர். அதற்கு முன்பாக குறும்பர்கள்(பழங்குடியினர்) ஆட்சி செய்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்கள் முக்கியமாக ஆடு, மாடுகள் மேய்த்தல் போன்ற பல்வேறு தொழில்களை செய்துள்ளனர். பின்னர் தொண்டை மண்டல பகுதியை இவர்களிடம் இருந்து பல்லவரான இளந்திரையன் கைப்பற்றி 24 மண்டலமாக பிரித்து ஆட்சி செய்துள்ளார்.
அதில், சென்னை மாம்பலம், புலியூர், எழும்பூர், மயிலாப்பூர், திருவான்மியூர், திருவல்லிக்கேணி, தாம்பரம், புழல், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். அந்த 24 மண்டலங்களும் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளன. இது 9, 10, 11,12 ஆகிய நூற்றாண்டுகளில் அந்தந்த பெயர்களில் கல்வெட்டுகள், கோயில் சிற்பங்கள் ஆகியவைகளில் பதிவாகி உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், 650 ஆண்டுகளுக்கு முந்தைய அப்போதைய மதராச பட்டினம் குறித்த கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில், இங்கு துறைமுகம் இருந்ததும், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் நடந்ததற்கான ஆதாரமும் உள்ளது. குறிப்பாக அரசுக்கு எந்தெந்த வகைகளில் வரி செலுத்த வேண்டும் என்கிற விவரமும் அதில் இடம்பெற்றுள்ளது. இது, பல்வேறு வசதிகளுடன் மதராசபட்டினம் இருந்ததற்கான சான்றாகும். எனவே, வெள்ளைக்காரர்கள் வருகையால்தான் மதராசபட்டினம் வளர்ச்சி அடைந்தது என கூறுவதை ஏற்க முடியாது.
மேலும் பல்லாவரம், பழவேற்காடு, பூந்தமல்லி, மாமல்லபுரம் பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன. அப்போது விலங்குகளை எதிர்ப்பதற்காக பயன்படுத்திய கற்களான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, 'தமிழக கோயில்களில் கட்டடக் கலை' என்ற தலைப்பில் தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநர் சந்திரமூர்த்தி விளக்கவுரை ஆற்றினார். இதில், கல்வெட்டு ஆராய்ச்சி மாணவ, மாணவியர், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com