சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தினசரி முறையில் நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில், விலைகளில் எந்தவிதமான விளைவுகள் நடந்திருக்கிறது என்று பார்க்கலாம்.
அதாவது, தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்து இரண்டு மாதங்களில், பெட்ரோல், டீசல் விலைகளில் லிட்டர் அளவுக்கு 2 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
15 நாட்களுக்கு ஒரு முறை விலையை மாற்றியமைக்கும் போது ஏற்படும் சின்ன சலசலப்புக் கூட இல்லாமல், தினசரி விலை நிர்ணய முறையில் சத்தமே இல்லாமல் 2 ரூபாய் அளவுக்கும் மேல் உயர்ந்துள்ளது.
அதாவது சென்னையில் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி, தினசரி விலை நிர்ணய முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.68.02 ஆகவும், டீசல் ரூ.57.41 ஆகவும் இருந்தன. இரண்டு மாதங்கள் ஆன நிலையில் 10 காசுகள், 50 காசுகள் என்ற அளவில் உயர்ந்து, நேற்று பெட்ரோல் விலை ரூ.2.57 அளவுக்கு உயர்ந்து 70.59 ஆகவும், டீசல் விலை ரூ.2.97 அளவுக்கு உயர்ந்து ரூ.60.38 ஆகவும் உயர்ந்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த எண்ணெய் நிறுவன அதிகாரி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தால், உள்நாட்டிலும் விலை குறையும் என்று தெரிவித்தார்.