பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்த அமைச்சரின் பேச்சுக்கு திமுக கண்டனம்

பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில் 'பாதாளம் வரை பாயும்' என்று சொல்கிறார்களே? இதுக்கு மேலும் உங்களுக்குத் தெரியவில்லையா என்று கேட்டுள்ளார்.
'பணம் பாதாளம் வரை பாயும்' என்பதுதான் பழமொழி. அதிமுகவுக்குள் நடக்கும் குழப்பத்துக்குள் மீன் பிடிக்க தற்போது பணம் மட்டுமே போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளது இந்தப் பேட்டியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றது, அதற்காக பேரம் நடத்தியது தொடர்பான ஆளுநர் விசாரணை ஒரு புறமும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மற்றொரு புறமும் இருக்கும் நேரத்தில் ஓர் அமைச்சரே பெரும்பான்மையை நிரூபிக்க பணம் கொடுப்போம் என்ற ரீதியில் பேட்டியளித்துள்ளது சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
குதிரை பேர ஆட்சி என்று இந்த ஆட்சியை மு.க.ஸ்டாலின் விமர்சிக்கும்போது கோபப்படும் முதல்வர், அமைச்சர் ஒருவரே குதிரை பேரத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்ற ரீதியில் பேசியதைக் கண்டிக்காமல் இருப்பது ஏன்?
எனினும், அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழ்நிலை வரும்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேட்டியை தமிழக ஆளுநர் நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com