சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை உள்ளிட்ட முதல்வர் பழனிச்சாமியின் அறிவிப்புகளை வரவேற்பதாக, அதிமுக எம்பியும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். பல்வேறு தரப்பில் எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்றும் தெரித்தார்.
முதல்வர் பழனிசாமியின் இந்த இரு முக்கிய அறிவிப்புகளை அடுத்து, அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமியின் அறிவிப்புகளை வரவேற்பதாக, அதிமுக எம்பியும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரித்துள்ளார்.
தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்புகள் மக்களின் எண்ணத்தினை பிரதிபலிப்பதாக அமைப்பித்துள்ளது அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கையினை நிறைவேற்றுவதாகவும் இது அமைந்துள்ளது
எனவே இந்த அறிவிப்பினை ஏற்று அதிமுகவுக்கு ஓ .பன்னீர்செல்வம் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கிறோம். இரு அணிகளுக்குஇடையேயான கருத்து வேறுபாடுகளை போக்கும் விஷயங்களை முதல்வர் செய்து வருகிறார்.
இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.