அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத 58 மருத்துவ இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் சேர்த்து மொத்தம் 3,050 மருத்துவ (எம்.பி.பி.எஸ்.)இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் அதாவது 456 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டன.
அதேபோல் பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 200 பல் மருத்துவ (பிடிஎஸ்) இடங்கள் உள்ளன. இவற்றில் 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன.
இதற்கான முதற்கட்ட கலந்தாய்வை மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் இயக்ககம் இணையதளத்தின் மூலம் ஜூலை 13, 14 தேதிகளில் நடத்தின.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.
கலந்தாய்வில் நிரப்பப்படாத தமிழக அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் புதன்கிழமை (ஆக.16) ஒப்படைக்கப்பட்டன.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறுகையில், கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட விவரங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத 58 எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்குத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த 58 இடங்களுக்கும் மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களுடன் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படும் என்றார்.