பெங்களூர்: இபிஎஸ் அணியில் எங்களுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் சிலர் ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ள டிடிவி தினகரன், கட்சியின் நன்மைக்காக விரைவில் ஆபரேஷன் செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.
பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவை சந்தித்த, துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், பொதுச் செயலர் சசிகலா மீதான அவப்பெயர் நீங்கும் என்பதற்காகவே நீதி விசாரணைக்கு தயார் என கூறினேன். எங்களுக்கு ஆதரவான சில எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் ஸ்லீப்பர் செல் போல் செயல்படுகிறார்கள். அணிகள் இணைப்பு, நினைவு இல்ல அறிவிப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்றார்.
மேலும், ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்கும் விவகாரத்தில் அவசரகதியில் செயல்பட்டுள்ளனர். பதவியைக் காத்துக் கொள்ள சில வியாபார நோக்கோடு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
அவசரகதியில் அணிகள் இணைந்தால் அதன் ஆயுட்காலம் நீடிக்காது. தற்போதைய நிலவரங்கள் குறித்து சசிகலாவுடன் பேசினேன். சசிகலா சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கட்சியின் நன்மைக்காக அடுத்து சில ஆபரேஷன்கள் நடக்கும் என்று தினகரன் கூறியுள்ளார்.