சரக்கு -சேவை வரியால் (ஜிஎஸ்டி) மீன்பிடித் தொழில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சுமார் 608 கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மீனவக் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மீன்பிடித் தொழிலையும் பாதித்துள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் மீன்பிடிக்கத் தேவையான வலை மற்றும் மீன்பிடி கயிறு 60 சதவீதம் தமிழகத்தில் இருந்துதான் விற்பனை செய்யப்படுகிறது. மீன்பிடி வலைக்கு 12 சதவீதமும், விசைப்படகுகளுக்கு 28 சதவீதமும் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களுக்கு 18 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களுக்கும், மீனவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும், உயர் ரக மீன்களுக்கும், கருவாட்டுக்கும் 5 சதவீதம் வரி விதித்திருப்பதால், இத்தகைய மீன்களை விற்கும்போது கூடுதல் விலை வைத்து விற்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் விலை நுகர்வோருக்கு சுமையை ஏற்படுத்தும்; மீன் விற்பனையும் பெருமளவு குறையும். இதனால் மீனவர்களுக்குத்தான் நஷ்டம் ஏற்படும்.
எனவே நுகர்வோர், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.