பெங்களூர்: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவை, துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் இன்று சந்தித்துப் பேசினார்.
கடந்த வாரம் பெங்களூர் சென்று, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசிய தினகரன், தமிழக அரசியலில் தற்போது பல முக்கியச் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இன்று மீண்டும் பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஒவ்வொன்றாக ஏற்று, அது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும், அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
தங்களது மிக முக்கிய நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, பன்னீர்செல்வம் அணியினர், இரு அணிகள் இணைப்புக் குறித்து இன்று ஆலோசனை நடத்தி, மாலையில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மத்திய சிறைக்குச் சென்ற டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.