ராஜீவ் காந்தி கொலை வழக்கு வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், பி.ராபர்ட் பயஸ் என்கிற குமாரலிங்கன், எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர், கடந்த 2000 -ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இவர்களின் தூக்குத் தண்டணையை ஆயுள் தண்டனையாகக் குறைந்தது.
இந்த நிலையில், 'சிறையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறோம். எனவே தங்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, கடந்த 2012 -ஆம் ஆண்டு நவம்பரில் இவர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.
இன்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் பதில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு வழக்கில் எத்தனை முறை பதில் மனு தாக்கல் செய்வீர்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் பின்னர் அதற்கு அனுமதி அளித்து வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.