கொடநாடு எஸ்டேட் பகுதியை சுற்றிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் முதன்மைக் குற்றவாளியான, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான சயன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கொடநாடு எஸ்டேட் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் பகுதியில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் விதமாக அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி நேற்றிரவு முதல் நடந்து வருகிறது. எஸ்டேட் வளாகத்தின் முக்கிய பகுதிகளில் இந்த கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரு சென்றிருப்பதாக ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.