மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 51 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நீர்வரத்துக் காரணமாக வியாழக்கிழமை காலை 48.77 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 50.83 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.06 அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 1,300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 21,947 கன அடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 15,973 கன அடியாகக் குறைந்தது. அணையின் நீர் இருப்பு 18.33 டி.எம்.சி.யாக இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று பொதுப் பணித் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.