அதிமுக ஆட்சி கலைவதற்கு திமுக காரணமாக இருக்கக் கூடாது என கருணாநிதி அறிவுரைத்ததாக அக் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார்.
இது தொடர்பாக துரைமுருகன் அளித்த பேட்டி: உடல் நலம் மோசனமான நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது கருணாநிதி எங்களை அழைத்து சில அறிவுரைகளைக் கூறினார். அப்போது கருணாநிதி பேசும் நிலையில் இருந்தார். மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா திரும்பி வந்து ஆட்சி நடத்த வேண்டும்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட நிலை: அப்படி அவர் வராவிட்டால் அதிமுக இரண்டாக உடையும். ஒருவேளை, அந்த நிலை ஏற்பட்டால் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா அணி உருவாகியிருந்த நிலையில் திமுக என்ன மாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததோ அதே நிலைப்பாட்டையே கடைப்பிடிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சி கலைவதற்கு திமுக காரணமாக இருந்துவிடாது என்றார். தற்போது கருணாநிதி நல்ல நிலையில் இருந்தாலும் அதிமுக ஆட்சியைக் கலைக்க முயற்சித்திருக்க மாட்டார். கருணாநிதியின் அறிவுரையைத்தான் ஸ்டாலின் தற்போது கடைப்பிடித்து வருகிறார். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
உடல் நலம்: கருணாநிதிக்கு நினைவலைகள் மங்கிவிட்டது எனச் சொல்ல மாட்டேன். தொலைக்காட்சிகளைக் கூர்ந்து கவனிக்கிறார். பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்கிறார். சளித் தொல்லையால் தொண்டையில் அவருக்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதை எடுத்துவிட்டால் பேசுவார்.
கூட்டணி இல்லை: முரசொலி விழா, போராட்டங்களில் சில கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இது அப்படியே கூட்டணியாக மாறுமா எனக் கேள்வி எழுப்புகிறீர்கள். அதை உறுதியாகச் சொல்ல முடியாது. இப்போது ஒன்றாக இணைந்து செயல்படுபவர்கள் கூட்டணியில் இல்லாமல் போகலாம். இப்போது எங்களோடு இணைந்து செயல்படாதவர்கள் தேர்தல் நேரத்தில் கூட்டணியில் இடம்பெறலாம்.