கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்து கொண்டிருந்த மலை ரயில் உந்து சக்தி குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணி நேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.
நாள்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரும் மலை ரயில் கடந்த சில நாள்களாக அடிக்கடி உந்து சக்தி குறைவு ஏற்படுவதால் மலைப் பாதையில் மெதுவாக ஊர்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி முதல் இப்பிரச்னை இருந்து வந்தாலும் கடந்த சில நாள்களாக இப்பிரச்னை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலைப் பாதையில் பல இடங்களில் நின்று வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மலை ரயில் படிப்படியாக உந்து சக்தி குறைந்து மெதுவாக ஊர்ந்து வந்தது. இதனால், ஆங்காங்கே நின்று வந்ததை ரயில்வே பணியாளர்கள் அவ்வப்போது சீர் செய்து குன்னூர் வரை கொண்டு சேர்த்தனர்.
இரண்டு மணி நேரம் தாமதமாக மலை ரயில் குன்னூருக்கு வந்து சேர்ந்ததால், சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
எனவே, ரயில்வே நிர்வாகம் அடிக்கடி பழுது ஏற்படும் இந்த மலை ரயிலின் பழுதுகளை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்று மலை ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.