நதிகள் இணைப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மணல் சிற்பத்தை பரமக்குடியை சேர்ந்த ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை வடிவமைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை அவ்வப்போது மணல் சிற்பங்களாக உருவாக்கி வருகிறார். நதிகளை இணைப்பதன் மூலம் விவசாயத்தை பாதுகாக்கலாம் என்பதை மையமாக கொண்டு ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இதனை ராமேசுவரத்துக்கு வந்திருந்த யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் பலரும் பார்த்து ரசித்தனர். சரவணன், சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனிடம் பாராட்டுச் சான்றிதழும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.