கோவை மாவட்டம், ஆனைமலையில் பிடிபட்ட 3 வயது குட்டி யானையை கும்கி யானையாக மாற்றும் வனத் துறையின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் கடந்த மார்ச் 14 -ஆம் தேதி 3 வயது குட்டி யானை பிடிபட்டது. வாயில் புண்களுடன் இருந்த அந்த யானைக்கு சிகிச்சை அளித்து காட்டில் விட்டபோதும், அது ஊருக்குள் திரும்பி வந்தது.
அதைப் பிடித்த வனத் துறையினர், கோவை ஆனைமலை வனப்பகுதியில் கூண்டுக்குள் அடைத்து, கும்கி யானையாக மாற்றி வருவதாக செய்தி வெளியானது. இதைச் சுட்டிக்காட்டி, அந்த யானையை கும்கி யானையாக மாற்றாமல், மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டுவிட உத்தரவிட வேண்டும் என்று கோரி "எல்சா' அறக்கட்டளையின் இணை நிறுவனர் பிரேமா வீரராகவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்தக் குட்டி யானை மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளதா என கேரள, அஸ்ஸாம் மாநில கால்நடை மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவர்கள் மூலம் பரிசோதனை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு ஆட்சேபம் ஏதும் உள்ளதா என தெரிவிக்கும்படி, தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 23 -ஆம் ஒத்திவைத்தனர்.