மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று நாள்களில் 6 அடி உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்வரத்து அதிக பட்சமாக நொடிக்கு 22 ஆயிரம் கன அடி வரை இருந்து வந்தது. இதனால் கடந்த 16 }ஆம் தேதி 45.71 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 51.83 அடியாக உயர்ந்தது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 6.12 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை நொடிக்கு 8,892 கன அடியாகக் குறைந்தது. குடிநீர் தேவைக்காக நொடிக்கு 1,300 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 18.98 டி.எம்.சி.யாக இருந்தது.