அதிமுக அணிகள் இணைப்பு: சுயநல, சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம்! ராமதாஸ் 

அதிமுக அணிகள் இணைப்பு சுயநல, சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ், திங்கட்கிழமை குற்றஞ்சாட்டினார்.
அதிமுக அணிகள் இணைப்பு: சுயநல, சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம்! ராமதாஸ் 

அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

எங்கிருந்தோ எழுதி இயக்கப்படும் நாடகத்தின் ஒரு கட்டமாக அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்திருக்கின்றன. அதன்பயனாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் அவர் உட்பட  இரண்டு பேர் அமைச்சர்களாக்கப்பட்டிருக்கின்றனர். இத்தனை நாட்களாக இரு குழுக்களும் எழுப்பிய அத்தனை சத்தங்களும் இதற்காகத் தான் என்பதை இணைப்பு விழா வைபவம் நிரூபித்திருக்கிறது. 

அதிமுகவின் இரு அணிகளும்  எதற்காக உடைந்தன, எதற்காக இணைந்தன என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். கடந்த 6 மாதங்களாக எடப்பாடி பழனிச்சாமி மீது  பன்னீர் செல்வம் அணியும், பன்னீர் செல்வம் அணி மீது எடப்பாடி பழனிச்சாமியும் முன்வைத்த குற்றச்சாற்றுகள் சாதாரணமானவை அல்ல. அவர்கள் முன்வைத்த குற்றச்சாற்றுகளால் அரசியலில் ஏற்பட்ட முடைநாற்றம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் தமிழக அரசியல் அரங்கிலிருந்து விலகாது.

அதிமுகவிலிருந்து வெளியேறிய பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் இணைப்புக்காக முன்வைத்த முதல் நிபந்தனை சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது தான். அவர்களின் அந்த நிபந்தனை இன்று வரை ஏற்கப்படாத நிலையில் எந்த அடிப்படையில் அவர்கள் இணைந்தார்கள் என்ற தமிழ்நாட்டு மக்களின் வினாவுக்கு அவர்கள் பதில் கூற வேண்டும். சாப்பாட்டு வாசத்தை நுகர்ந்ததும் உண்ணாவிரதத்தின் உறுதி மறைந்ததைப் போன்று கொள்ளையடிப்பதற்கான பதவிகள் கிடைத்தவுடன் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன.

அதிமுகவின் எந்த அணியைச் சேர்ந்தவர்களும் உத்தமர்கள் அல்லர். பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஊழல் உத்தமர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டாலும் கூட, சசிகலாவின் காலில் விழுந்து அரசியல் நடத்தியவர்கள் தான். அதிகாரத்தில் இருந்து அடித்த கொள்ளையை சசிகலாவின் காலடியில் கொட்டி அவர் அள்ளி வீசியதை கமிஷனாக பெற்று மகிழ்ந்தவர்கள் தான். சசிகலா கொள்ளைக் கூட்டத்தின் தலைவி என்றால் இவர்கள் அந்தக் கூட்டத்தின் உறுப்பினர்கள். சசிகலாவுக்கும், இவர்களுக்கும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. கொள்ளைக் கூட்டத்தில் தலைவன் அசரும்போது அவனை கொலை செய்து விட்டு அடுத்த நிலையில் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைப் போன்ற நிகழ்வு தான் இப்போது அதிமுகவில் நடைபெற்றிருக்கிறது. சுயநல, சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம் இதுவாகும்.

அதிமுகவிலிருந்து விலகிய பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கடந்த ஆறு மாதங்களில் தமிழக மக்களின் நலனுக்காக ஏதேனும் ஒன்றையாவது செய்திருப்பார்களா? எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கடந்த 6 மாதங்களில் மக்கள் நலனுக்கான ஒரு திட்டத்தையாவது செயல்படுத்தி இருக்குமா? கூவத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கோடிகளைக் கொட்டிக்கொடுத்து  வாங்கிய பதவியை தக்கவைத்துக் கொண்டு கொள்ளையடிப்பது என்பதில் தான் பினாமி ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தினார்கள். அதேபோல், இழந்த பதவியை எதை விற்றாவது பிடித்து விட வேண்டும் என்பது மட்டும் தான் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் ஒற்றை நோக்கமாக இருந்தது.

இணைப்பின் மூலம் இரு அணியினரும் தங்களின் நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டனர். ஆனால், பாவம் இவர்களை நம்பி, இவர்கள் கொடுத்த 200 ரூபாயையும், 300 ரூபாயையும் வாங்கிக் கொண்டு வாக்களித்த மக்கள் தான் இப்போது ஏமாளிகளாகியிருக்கின்றனர். நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு பறிபோன போதும், உழவர்கள் தற்கொலை செய்து கொண்ட போதும் அதன் பாதிப்புகளை சரி செய்ய துரும்பைக்கூட அசைக்காத ஆட்சியாளர்கள் இப்போது பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் இரவு பகலாக பேச்சு நடத்தி இணைந்திருப்பதிலிருந்தே இவர்கள் எத்தகைய சந்தர்ப்பவாதிகள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். நம்பி வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு இவர்கள் செய்த துரோகத்திற்கான தண்டனை நிச்சயம் உண்டு. அதிலிருந்து இவர்கள் தப்ப முடியாது.

இயற்கை எதிராக நடக்கும் எந்த வினையையும் இயற்கையே சரி செய்யும். தமிழகத்தில் நடந்துள்ள  கொள்ளைக்கான கூட்டணியையும் மண்ணை கவ்வ வைக்கும் வலிமை இயற்கைக்கும், மக்களுக்கும் உண்டு. வெகுவிரைவில் இயற்கையும், மக்களும் அவர்களின் வலிமையை நிரூபிப்பார்கள். அப்போது இருக்க வேண்டிய இடத்தில் அனைவரும் இருப்பார்கள். அப்போது புதியதோர் தமிழகம் அமையும் என்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com