அணிகள் இணைப்பு: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

அதிமுக அணிகள் இணைப்பு இன்று நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளநிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல்
அணிகள் இணைப்பு: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு


சென்னை:  அதிமுக அணிகள் இணைப்பு இன்று நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளநிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியையும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியையும் இணைப்பதற்கான ரகசிய பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது.

அணிகள் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 2 முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது, சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

தற்போது, இந்த 2 நிபந்தனைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயல் தோட்டம் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என்று கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். இதையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இரு அணிகளும் இணையும் சூழ்நிலை ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மற்றும் ஆட்சியில் உள்ள பதவிகள் பங்கீட்டில் இழுபறி நிலை ஏற்பட்டதால் இணைவதில் சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், சனிக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் நல்ல முடிவு வெளியிடப்படும். பொறுத்திருங்கள் என்று தெரிவித்தார்.

இதையடுத்து இரு அணிகளும் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் ஓ பன்னீர்செல்வமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருவரும் சந்தித்த பின் அணிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.  

இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து முதல்வர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கூட்டாக அறிவிப்புகள் வெளியிடுகிறார்கள். பின்னர் கட்சி குறித்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இணைப்பு அறிவிப்பு மற்றும் முக்கிய ஆலோசனைகளுக்கு பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கின்றனர். அங்கு அவருக்கு மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய ஆலோசனைகளில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவி, அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் முக்கிய பொறுப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

அதிமுக இரு அணிகளும் இணையும் பட்சத்தில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி மற்றும் நிதி அமைச்சராகவும் அவர் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், அவரது அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை வகிக்கும் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பொதுப்பணித்துறையும் வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போது, பொதுப்பணித்துறை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் வரும் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொள்வார்கள் என தெரிகிறது.

இந்நிலையில், மும்பையில் இருந்து அவசரமாக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருகிறார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து பிரிந்திருந்து அதிமுகவினர் இன்று இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் மாற்றம்: அணிகள் இமைந்தால் அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் செம்மலைக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, பின்னர் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

கட்சி பதவியை பொறுத்தவரை, தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும், ஒருங்கிணைப்பு குழுவில், இரு அணியில் உள்ள நிர்வாகிகளில் இருந்து தலா 5 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் வரும் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொள்வார்கள் என தெரிகிறது.

அதன்பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில், சசிகலாவையும், டிடிவி தினகரனையும் கட்சியை விட்டு நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட இருக்கிறது. அதன்பிறகே, கட்சியின் பொதுச்செயலாளர் யார்? என முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com