சென்னை: அதிமுக அணிகள் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு மும்பையில் இருந்து அவசரமாக சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விலகி தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டுகிறார். இதையடுத்து அதிமுக 3 அணிகயாக இயங்கி வருகிறது.
இந்நிலையில், பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைப்புக்கான பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தநிலையில், அதிமுக பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இன்று இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக அணிகள் இணைப்பிற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை 9.30 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு சென்னை வருகிறார் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வருகிறார் என்ற தகவல் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசர வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.
அணிகள் இணைந்த பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றம் இருக்க கூடும் எனவும், துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வமும், அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் இன்றே பதவியேற்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.