சென்னை: அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு என்னென்ன மாற்றங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு என்பது குறித்து ஒரு பார்வை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்தத் தலைவர்களுடனும், ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இவ்விரு தரப்பினரும், நண்பகல் 12.30 முதல் 1.00 மணியளவில் அதிமுக தலைமையகத்தில் ஒரே அணியாக இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு இருவரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவார்கள் என்பதற்காக, ஜெயலலிதா சமாதியில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் 3.30 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதற்காக, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டு வருகிறார்.
இரு அணிகளும் இணைந்த பிறகு, உடனடியாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்பார் என்றும், அவரது அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் உட்பட இரண்டு பேர் அமைச்சரவையில் இணைய வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
அதோடு, இன்றே பதவியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.