சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து, கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிறகு இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். பின்னர் எழுந்து நின்று, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததன் சாட்சியாக, இருவரும் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ஓ. பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். பிறகு முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்படுவார் என்றும், இணை ஒருங்கிணைப்பாளராக தான் செயல்படுவேன் என்றும் கூறினார்.
மேலும், துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி. முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் செயல்படுவர் என்றும் பழனிசாமி அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி. முனுசாமி உரையாற்றினார்.
இதன் மூலம், கடந்த பிப்ரவரி 7ம் தேதி பிரிந்து சென்ற இரு அணிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளன.