இந்திய சர்வதேச அறிவியல் விழா சென்னையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக நடத்தப்படும் சிறந்த புது நிறுவனங்களுக்கான போட்டியில் பங்கேற்க பல்வேறு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் மத்திய பூலோக அறிவியல் அமைச்சகம் சார்பில் இந்திய சர்வதேச அறிவியல் விழா சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த விழா சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், தரமணியில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக வளாகங்களில் அக்டோபர் 13 முதல் 16 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் - அப்) போட்டி 2017, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அக்டோபர் 14, 15 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க 4 பிரிவுகளின் கீழ் புது நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதாவது, தொடங்கப்பட்டு 3 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ள தொழில் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்லூரியிலிருந்து அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடித்துச் சென்ற மாணவர்களால் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
மற்றொரு பிரிவின் கீழ் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களால் நடத்தப்பட்டு வரும் ஸ்டார்ட்- அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஆராய்ச்சி கல்வி நிறுவன வளாகங்களில் இயங்கி வரும் ஸ்டார்ட் - அப் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு www.startup.aicte-india.org என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.