ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக மாற்றுவது சட்ட ரீதியில் தவறானது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்றுவதை சட்டப்படி செய்ய வேண்டும். இப்போது நடைபெறுவது சட்ட ரீதியாகத் தவறானது. எனவே, இதில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டக் கூடாது என்றுதான் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இதை எதிர்த்துப் போராடாமல் தமிழக அரசே ஒப்புதல் அளித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அதிமுகவில் இப்போது நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும், கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என எல்லாமே தில்லியில் நடக்கிறது. அதற்கேற்றாற்போல இங்கு செயல்படுகிறார்கள்.
ஜெயலலிதா எப்போது மரணமடைந்தாரோ அன்று முதலே திமுக மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் அவருடைய மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறிவந்தனர். குறிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இதுபோல, ஓ.பன்னீர்செல்வமும் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், இப்போது தமிழக அளவிலான விசாரணைக்கு அவர் ஒப்புக்கொண்டிருப்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.