சென்னை: அதிமுகவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியும் இன்று இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில், 13 ஆதரவு எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், எம்எல்ஏக்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தங்கத் தமிழ்ச்செல்வன், கோதண்டபாணி, முத்தையா உட்பட 13 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். மேலும், கட்சியின் தில்லி அரசு சிறப்பு பிரதிநிதி தாளவாய் சுந்தரமும் டிடிவி தினகரன் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
தஞ்சையில் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், 20 ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட நிலையில், மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் 13 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இரு அணிகள் இணைவதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்தும் அவர் மீது வழக்குத் தொடர்வது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணிகள் இணைப்பு குறித்து ஓ. பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தத்தமது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தும் நிலையில், டிடிவி தினகரனும் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.