சென்னை: தமிழகத்தின் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற எளிய விழாவில், துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவியேற்றுக் கொண்டார்.
முக்கிய அமைச்சர்களும், அதிமுக முக்கிய நிர்வாகிகளும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கைகளை இணைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் குலுக்கச் செய்தார். பிறகு, ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள்: தமிழகத்தின் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் வகித்து வந்த நிதித் துறை மற்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வகித்து வந்த வீட்டு வசதித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற மேம்பாடு, சிஎம்டிஏ துறைகளும் பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியிடம் இருந்த கால்நடைத் துறை உடுமலை ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
அமைச்சர் செங்கோட்டையன் வசம் இருந்த இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எம்.சி. சம்பத் வசம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை சி.வி சண்முகத்துக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.