சென்னை: தொண்டர்களின் மகிழ்ச்சிதான் என்னுடைய மனதிலும் நிறைந்து காணப்படுகிறது என்று துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பலகட்ட காத்திருப்புகளுக்குப் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக இரு அணிகளின் இணைப்பு நிகழ்வானது, ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியஇருவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இருவரும் பேசிய பிறகு கட்சி பதவிகள் தொடர்பாகவும், தமிழக அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் தலைமைச் செயலகம் சென்ற அவர் துணை முதல்வராக அங்கு பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
முதலில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும், பின்னர் ஜெயலலிதாவும் அதிமுக என்னும் கட்சியினை வளர்த்தெடுத்தனர். அப்படி சிறப்பு கொண்ட இந்த கட்சியில் உண்டான பிரச்சினைகள் தற்பொழுது களையப்பட்டு விட்டன. இதுவே ஒவ்வொரு அதிமுக தொண்டனின் விருப்பமும் மகிழ்ச்சியுமாகும்..
எனவே தொண்டர்களின் மகிழ்ச்சிதான் தற்பொழுது என்னுடைய மனதிலும் நிறைந்து காணப்படுகிறது.
இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.