விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சாலையோரத் தடுப்புக் கட்டையில் கார் மோதி கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
கோவையில் உள்ள தனியார் ஆடை வடிவமைப்புப் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் முனிவிக்னேஷ்வரன்(22), கோவை, வி.கே.வி. நகரைச் சேர்ந்த சேகரன் மகன் பிரவீன்(21), சேலம், இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் பிரவீன்குமார்(20), திருப்பூர், குமரன் நகரைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஹரிபிரசாத்(19), திருப்பூர், காந்தி நகரைச் சேர்ந்த இஸ்மாயில் மகன் முகமதுமுக்தர்(21), கோவை தாசர் நகரைச் சேர்ந்த பாரிவள்ளல் மகன் எழில் அமுதன்(21) ஆகியோர் புதுச்சேரிக்கு சனிக்கிழமை காரில் சுற்றுலா வந்தனர்.
புதுச்சேரியில் தங்கியிருந்த அவர்கள் சனிக்கிழமை இரவு, பொழுதை கழிக்கும் பொருட்டு, சென்னை நோக்கி காரில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சிறிது தொலைவு சென்றனர். பின்னர், மீண்டும் புதுச்சேரிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை முனிவிக்னேஷ்வரன் ஓட்டி வந்தார்.
நள்ளிரவு 12.15 மணி அளவில் கோட்டக்குப்பம் பகுதியில் வந்தபோது மழை பெய்தது. அப்போது, முன்னால் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக்கை ஓட்டுநர் அழுத்தியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமிருந்த தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முனிவிக்னேஷ்வரன், பிரவீன்ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
பிரவீன்குமார், ஹரிபிரசாத், முகமதுமுக்தர், எழில்அமுதன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை கோட்டக்குப்பம் போலீஸார் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.