வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில், அதில் பயணம் செய்த 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.
பேர்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி மேடு, முஸ்லிம்பூரைச் சேர்ந்தவர் சாஜித் அஹமது (33). இவரது மாமனார் உசேர்அஹமது (52), மாமியார் உஸ்நரா (45). இருவரும் சனிக்கிழமை ஹஜ் புனித பயணம் சென்றனர்.
சாஜித்அஹமது உறவினர்களுடன் சென்று சென்னை விமான நிலையத்தில் அவர்களை வழியனுப்பி விட்டு, காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பேர்ணாம்பட்டு அருகே உள்ள செர்லபல்லி கிராமம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சாஜித் அஹமதுவின் மகள்கள் ஆத்துப்பா (4), அதிப்பா (3) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த சாஜித்அஹமது, அகீல்அஹமது, யாகூப் (14), முகமது சல்மான் (31), பைரோஸ் அகமது (31), பயாஸ் அஹமது (35) உள்ளிட்ட 11 பேர் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.