புது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வி.கே. சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி சசிகலா உள்ளிட்ட 3 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மறு சீராய்வு மனுவை, நீதிபதிகள் அறையில் விசாரிக்காமல், வழக்கமான நீதிமன்ற அமர்வு முன்பு மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.