சென்னை: அதிமுவின் இரு அணிகளும் இணைந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு நிதித்துறை வழங்கப்பட்ட நிலையில் இன்று கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றபோது, அவர் வகித்து வந்த நிதித்துறை உட்பட அனைத்துத் துறைகளும் அமைச்சர் ஜெயக்குமார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது ஓ. பன்னீர்செல்வம் அணியினர் இணைந்த நிலையில், அவருக்கு ஆட்சியிலும், கட்சியிலும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அவருக்கு நேற்று நிதித்துறை, வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் வசம் இருந்த சட்டமன்றம், திட்டமிடல், தேர்தல், பாஸ்போர்ட் முறை உள்ளிட்ட துறைகளும் கூடுதலாக ஓ. பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அவர் முதல்வராக இருந்த போது அவர் வகித்தப் பொறுப்புகள் அனைத்தும் மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைகளை ஜெயக்குமார் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.