புதுதில்லி: நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மசோதா நிறைவேற்றித் தரலாம்; வேறு என்ன செய்ய முடியும் என்று அதிமுகவினைச் சேர்ந்தவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பான வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் 'நீட்' அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது. இது போல பொதுவான தேர்வில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு தனது வாதங்களை முன்வைத்தது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வினை துவங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கையானது 'நீட்' தேர்வு அடிப்படையில் தான் நடக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் மருத்துவ கலந்தாய்வினை செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு முன்னரே முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்புக்கு பின்னர் தில்லியில் அதிமுகவினைச் சேர்ந்தவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
நீட் விவகாரத்தில் தமிழக அரசு தன்னால் இயன்ற எல்லா விசயங்களையும் செய்தது. ஒவ்வொரு நிலையிலும் தமிழகத்திற்கு நம்பிக்கை அளிப்பதாகவே அப்போதைய நிலைமையிருந்தது. மாநில சட்டப் பேரவையில் அரசு கொண்டு வந்த மசோதாவுக்குஅனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தன. ஆனால் மாநில அரசு கொண்டு வந்த ஒரு மசோதாவை மத்திய அரசு எவ்வாறு குற்றம் சொல்லலாம்?
தொடர்ந்து நம்மால் இயன்ற எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம். ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்போம். கூட்டாட்சி தத்துவத்தின் படி நாம் எல்லா வகையிலும் போராடி இருக்கிறோம். நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மசோதா நிறைவேற்றித் தரலாம்; வேறு என்ன செய்ய முடியும்?
மத்திய அரசும், பாரதிய ஜனதா கட்சியும் நமக்கு போதிய ஆதரவு அளித்தன. ஆனால் காங்கிரஸ் கட்சி குடும்பங்களை சேர்ந்தவர்கள் நமக்கு எதிராக வழக்கு தொடந்தனர். இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் ஆணையினை நிறைவேற்றுவது நமது கடமையாகும்.
இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.