தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பதவி விலக வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
காவிரி பிரச்னையில் துரோகம் செய்ததாகக் கூறி, அதற்காக தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தி, மதிமுக சார்பில் சென்னையில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அளித்த பேட்டி: மேகேத்தாட்டுவில் அணை கட்டிக்கொள்ளலாம், எங்களுக்குத் தண்ணீர் மட்டும் விட்டால் போதும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்குரைஞர் சேகர் நாப்தே கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா தற்போது முதல்வராக இருந்திருந்தால், அந்த வழக்குரைஞரை உடனடியாக நீக்கியிருப்பார். ஆனால், தமிழகத்தில் விவசாயத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணைபோகிறார். காவிரிப் பிரச்னையில் துரோகம் செய்த முதல்வர் அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றார் அவர்.
பின்னர், வைகோ உள்பட அந்தக் கட்சியைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.